Tuesday, January 10, 2012

மரம் நடுவோம்-மனிதவளம் காப்போம்....







நாட்டின் செல்வத்தை பெருக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் மரங்களை போல் ஒரு வளமான செல்வம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம், இன்றைக்கு தயாரிக்கப்படும் கார்களும், பைக்குகளும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஓடப்போகிறது என்று தெரியவில்லை. பாசில் ப்யூயல் என்று சொல்லப்படும் பெட்ரோலும், டீசலும் பூமிக்கடியில் கிடைப்பது குறிப்பிட்ட காலத்திற்கு தான். பிறகு மீண்டும் மாட்டு வண்டிக்கோ, கட்டைக்கோ திரும்ப வேண்டியது தான். ஆனால் மரங்கள் என்பவை மனிதன் இருக்கும் வரை பலன் தருபவை. 

உதாரணத்திற்கு
தென்னை மரத்தை எடுத்துக் கொள்வோம். தென்னையிலிருந்து தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, கயிறு,கீற்று, தேங்காய், மரம் என்று எத்தனையோ பலன்கள் கிடைக்கின்றன. இந்த அனைத்து பொருட்களுமே நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாக்குமரம் வளர்ப்பதால் பாக்கும், இரப்பர் மரத்தால் இரப்பரும், புளிய மரத்தால் புளியும், சவுக்கு மரத்தால் விறகும், இலுப்பை மரத்தால் எண்ணெயும் சோப்பும் பெறுகிறோம்.
எனவே எல்லா மரங்களுமே ஏதோ ஒரு வகையில் நமக்கு உதவுகின்றன. ஆனால் இதே மரங்களை தான் மின்சார வயர் கொண்டு போக தடங்கலாக இருக்கிறது என்பதற்காக ஒரே நொடியில் வெட்டி சாய்க்கிறது மின்சார வாரியம். இன்றைக்கு நமக்கு மின்சாரம் தயாரிக்க கிடைக்கும் நிலக்கரியும், வண்டி ஓட்ட உதவும் பெட்ரோலும் கூட இந்த மரங்கள் பூமியில் புதையுண்டு போனதால் கிடைப்பவை என்பதை கூட மறந்து விடுகிறோம். 

மழை அதிகம்
இது மட்டுமா...நாம் ஓட்டும் வாகனங்கள் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு என்ற நச்சை எடுத்துக் கொண்டு பிராணவாயுவை அளிக்கின்றன. வெண்மேகங்கள் கடலிலிருந்து நீரைப்பெற்று நீராவியாக மாற்றி வைத்துக் கொண்டு கரிய மழை மேகங்களாக திரண்டு வரும் போது அதன் வேகத்தை காட்டில் இருக்கும் அடர்ந்த மரங்கள் தடுக்கும் போது தானே அங்கு காற்றின் அழுத்தம் ஏற்பட்டு மழை பொழிகிறது. இதனால் தான் மரங்கள் அடர்ந்த பகுதியில் மழை அதிகம் பொழிகிறது.

எனவே, இனியும் மரங்களை நமது சக மனிதர்களாக பாவித்து அவற்றுக்கு எந்த துன்பமும் நேராமல் பார்க்க வேண்டும். முடிந்த வரை காணும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நடவேண்டும். இந்த மரக்கன்றுகள் நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்தும். நாம் சுவாசிக்க தூய்மையான காற்றைக் கொடுக்கும். வெயிலின் தாக்கம் தலையை தாக்கும் போது மனிதனுக்கு எரிச்சல், வேலை செய்வதில் மந்தம், கோபம், வியர்வை என்று சகலமும் ஏற்பட்டு ஆயுளை குறைத்து விடுகிறது. ஆனால் ஜில்லென்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் வசிக்கும் போது இவை எல்லாம் நம்மை அண்டவே அண்டாது. எனவே மரக்கன்றுகளை நாம் வசிக்கும் இடத்திலும், பணிபுரியும் இடத்திலும் நடுவோம். 

மரம் நடவேண்டிய இடங்கள்
மரங்களை பொதுப்பூங்காக்கள், சாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்கள், அரசு அலுவலகங்கள், ஆற்றின் கரை, கண்மாய், ஏரிக்கரை ஓரங்கள், ஓட்டல்கள், வங்கிகள், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நடலாம். ஆனால் இந்த இடங்களில் எந்த மாதிரியான மரங்களை நடவு செய்வது என்பதும் முக்கியம். 

உதாரணமாக ரயில் நிலையத்தில் விரிந்து பரந்த பச்சை இலைகளுடன், வண்ணவண்ண பூக்களை பூக்கும் மரங்களை நட்டால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு மன மகிழ்ச்சி ஏற்படும். பூ மரங்களை கண்டாலே கண்களும், மனதும் குளுமையடையும். இரயில் கிராசிங்கை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இது போன்ற மரங்களை நடலாம். காரணம், ஒரு ரயில் அந்த பாதையை கடக்கும் வரை அந்த ரெயில் கேட்டின் முன்னால் காத்துக் கிடக்கும் மக்களுக்கு இந்த மரங்கள் குளுமையை தரும்.
ஆனால் இதே போன்ற அதிக பூ பூக்கும் மரங்களை மருத்துவமனையில் நட வேண்டுமா என்பதை அங்குள்ள மருத்துவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், சில பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜி என்னும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்படி வேறுபாடுகளை கண்டறிந்த மரங்களை நடவேண்டும். சென்னை நகரத்தை சிங்கார சென்னையாக மாற்ற கூவம் நதியை சுத்தப்படுத்த தி.மு.க ஆட்சி முயன்றது. ஆனால் இதற்கு மிகப்பெரிய திட்டம் எல்லாம் போட தேவையில்லை. 

கூவத்தின் இரண்டு புறங்களிலும் வலுவான மரங்களை நட்டால், கூவத்தின் நாற்றம் மரத்தின் காற்றால் பல மடங்கு குறைந்து போகும். சென்னை பசுமையாக மாறும். இது போல் தமிழ்நாட்டின் அத்தனை ஆறுகளின் கரைகளிலும் மரங்களை நடலாம். இப்படி ஆறுகளின் கரைகளில் மரங்களை நடும் போது மாலை வேளைகளில் கரை ஓரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், சிறிது களைப்பாறவும் மனதுக்கு இதமான சூழல் ஏற்படும். 

இது போல் கிராமங்களில் பலன் தரும் பழங்கள் அதிகம் கொடுக்கும் மரங்களை நட்டால், காசு கொடுத்து விலை மதிப்புள்ள பழங்களை வாங்கி உண்ண முடியாத ஏழைகள் இந்த மரங்களின் பழங்களை பறித்து உண்டு மகிழ்வார்கள்.
.

1 comment:

  1. இதுதான் உண்மை நண்பரே...

    ReplyDelete